சென்னை: பிளஸ் 2 வகுப்பு தேர்வு முடிவுகள் நாளை இணைய தளத்தில் வெளியாகிறது.
முடிவுகள் வெளியான 5 நிமிடத்தில் மதிப்பெண்களுடன் கூடிய தேர்வு முடிவுகள் மாணவர்களின் பெற்றோர்களின் செல்போனுக்கே அனுப்பி வைக்கும் வசதியை தேர்வுத்துறை செய்துள்ளது. பிளஸ் 2 வகுப்பு பொதுத் தேர்வு கடந்த மார்ச் மாதம் 1ம் தேதி தொடங்கி ஏப்ரல் 6ம் தேதி முடிந்தது.
இந்த தேர்வில் தமிழகம், புதுச்சேரியை சேர்ந்த 6,903 பள்ளிகளில் படித்த 8 லட்சத்து 66 ஆயிரத்து 934 மாணவர்களும் மற்றும் தனித்தேர்வர்கள் 40 ஆயிரத்து 686 பேர் என மொத்தம் 9 லட்சத்து 7 ஆயிரத்து 620 பேர் எழுதினர்.
அறிவியல் பாடத் தொகுதியின் கீழ் 5 லட்சத்து 47 ஆயிரத்து 664 பேர் எழுதினர். வணிகவியல் பாடத் தொகுதியின் கீழ் 2 லட்சத்து 42ஆயிரத்து 290 பேர் எழுதினர். கலைப் பாடத் தொகுதியில் 14 ஆயிரத்து 228 பேர் எழுதினர்.
சென்னையில் 50 ஆயிரத்து 584 பேரும், புதுச்சேரியில் 15 ஆயிரத்து 142 பேரும் எழுதினர். மேற்கண்ட தேர்வுக்காக தமிழகம் புதுச்சேரியில் மொத்தம் 2794 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டிருந்தன. தேர்வின் விடைத்தாள் கடந்த ஏப்ரல் 23ம் தேதி முதல் 77 மையங்களில் திருத்தத் தொடங்கி, மே மாதம் முதல் வாரத்தில் பணி முடிந்தது.
இதையடுத்து, தேர்வு முடிவுகளை வெளியிடுவதற்கான பணிகள் சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள டேட்டா மையத்தில் மேற்கொள்ளப்படுகிறது. பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியிடும் போது, மாநிலத்தில் முதல் 3 இடங்கள் பிடித்த மாணவர்களின் பட்டியல் தனியாக தேர்வு முடிவின் போது வெளியிடுவது வழக்கம். கடந்த ஆண்டு முதல் இந்த நடைமுறை மாற்றப்பட்டு, முதல் 3 இடங்கள் ரத்து செய்யப்பட்டு, கிரேடு முறை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
இந்த ஆண்டும் அதே நடைமுறையின் கீழ் தேர்வு முடிவுகள் நாளை வெளியாக உள்ளது.
தேர்வு முடிவுகள் வழக்கமாக சென்னையில் உள்ள தேர்வுத்துறையில் ஒவ்வொரு ஆண்டும் 9.30 மணிக்கு தேர்வுத்துறை இயக்குநர் வெளியிடுவார்.
அதற்கு பிறகு அந்தந்த பள்ளியில் காலை 10 மணிக்கு பள்ளித் தலைமை ஆசிரியர்கள் தகவல் பலகையில் ஒட்டுவார்கள்.
ஆனால், சில பள்ளிகளில் முன் கூட்டியே தேர்வு முடிவு விவரங்களை வெளியில் சொல்லிவிடுவதால், தேர்வுத் துறை இயக்குநர் வெளியிடுவதற்கு முன்னதாகவே வெளியில் தகவல் பரவிவிடுகிறது.
அதனால், இந்த ஆண்டுக்கான தேர்வு முடிவுகளின் புள்ளி விவரங்கள் அடங்கிய பகுப்பாய்வு பட்டியல் தேர்வுத்துறை இணைய தளத்தில் வெளியிட தேர்வுத்துறை திட்டமிட்டுள்ளது.
இது குறித்து தேர்வுத்துறை இயக்குனர் வசுந்தராதேவி, அனைத்து பள்ளிகளுக்கும் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறியுள்ளதாவது:
ஒவ்வொரு ஆண்டும் பொதுத் தேர்வுக்கான தேர்வு முடிவுகள் ெவளியிடும் நாளில் பள்ளிகள் மற்றும் தேர்வு மையங்களுக்கு மாணவர்கள் நேரில் சென்று முடிவுகளை அறிந்து கொள்ள வசதியாக மதிப்பெண் பட்டியல்கள் அச்சிட்டு பள்ளிகளுக்கு வினியோகம் செய்யப்பட்டு பள்ளிகளில் ஒட்டப்பட்டது.
இந்நிலையில் இந்த ஆண்டுக்கான தேர்வு முடிவுகள் நாளை 9.30 மணிக்கு(16ம் தேதி) வெளியிடப்பட உள்ளது.
இதையடுத்து, அனைத்து மேனிலைப் பள்ளிகளுக்கும் தேர்வு முடிவுகள் குறித்த பட்டியல்கள்
www.tndge.in,
www.dge.tn.gov.in
ஆகிய இணைய தளங்களில் வெளியிடப்படும்.
அந்தந்த பள்ளிகள் அவர்களுக்கு ஏற்கெனவே வழங்கப்பட்டுள்ள user ID, password ஆகியவற்றை பயன்படுத்தி ஆன்லைன் வழியாகவே பதிவிறக்கம் செய்துகொள்ள வேண்டும்.
அதற்கான ஏற்பாடுகளை முன்னதாகவே செய்து வைத்துக் கொள்ள வேண்டும்.
இது குறித்த விவரங்களை அந்தந்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு பள்ளித் தலைமை ஆசிரியர்கள் தெரியப்படுத்த வேண்டும் என்று அந்த சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து நாளை, காலை 9.30 மணி அளவில் பள்ளிகளுக்கு மாணவர்கள் நேரில் சென்று மதிப்பெண்களுடன் கூடிய தேர்வு முடிவுகளை தெரிந்து கொள்ளலாம்.
மேலும், தேர்வு முடிவுகள் வெளியான 5 நிமிடம் முதல் 10 நிமிடத்தில் அந்தந்த மாணவர்கள், அவர்களின் பெற்றோரின் செல்போனுக்கும் முடிவுகள் வந்து சேரும்.
No comments:
Post a Comment