தமிழகத்தில் பிளஸ் 2 அரசுப் பொதுத் தேர்வுகள் மே 16 ஆம் தேதி (புதன்கிழமை) காலை வெளியிடப்படும் நிலையில், அதை மாணவர்களுக்கு வெளியிடுவது குறித்து பள்ளிகளுக்கு கல்வித் துறை சார்பில் புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
தமிழகத்தில் 10 மற்றும் பிளஸ் 2 அரசுப் பொதுத் தேர்வுகள் மதிப்பெண்கள் அடிப்படையில் முதல் 3 இடங்கள் வரிசைப்படுத்தப்பட்டு வெளியிடப்பட்டு வந்தன. கடந்த ஆண்டு முதல் மதிப்பெண் தரவரிசைப்படுத்தும் முறை கைவிடப்பட்டது. மேலும், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகத்துக்கு அட்டவணைப்படுத்தப்பட்ட மதிப்பெண் பட்டியல்கள் அனுப்பிவைக்கப்பட்டு, அதன்பின் பள்ளிகளுக்கு வழங்கும் முறையும் கடைப்பிடிக்கப்பட்டு வந்தது.நடப்பாண்டில் மதிப்பெண் தரவரிசை கைவிடப்பட்டதால், தேர்வு முடிவுகள், மாணவர்களின் மதிப்பெண் பட்டியல்கள், அந்தந்தப் பள்ளிகளுக்கு மின்னஞ்சல் மூலம் நேரடியாகவே அனுப்பி வைக்கப்படவுள்ளன.
மே 16 ஆம் தேதி காலை 9.30 மணிக்கு அனைத்துப் பள்ளிகளிலும் மாணவ, மாணவியரின் தேர்வு முடிவுகளை மின்னஞ்சல் மூலம் பதிவிறக்கம் செய்து, அதை அறிவிப்புப் பலகைகளில் ஒட்டவேண்டும் என கல்வித் துறை அறிவுறுத்தியுள்ளது. அதேநேரம், தனித்தனியாக மாணவ, மாணவியரின் செல்லிடப்பேசிகளுக்கும் குறுந்தகவல்கள் அனுப்பி வைக்கப்படவுள்ளன. செல்லிடப்பேசி இல்லாதவர்கள் பள்ளிகளுக்கு நேரடியாகச் சென்று தேர்வு முடிவுகளை அறியலாம். மேலும், அனைத்துப் பள்ளிகளும் தேர்வு முடிவுகளை சாதனைபோல் மாணவர்களின் மதிப்பெண்ணைக் குறிப்பிட்டு விளம்பர பேனர்கள் வைக்கக்கூடாது. தேர்வு முடிவு சதவிகிதத்தை குறிப்பிட்டும் அறிவிப்புகள் வெளியிடக்கூடாது என, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகம் மூலம் அனைத்துப் பள்ளிகளுக்கும் அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.
மதிப்பெண், தேர்ச்சி விகிதம் போன்றவற்றை குறிப்பிட்டு தங்கள் பள்ளிகளை முதன்மைப்படுத்தும் கல்வி நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.
மதுரை மாவட்டத்தில் பிளஸ் 2 பொதுத் தேர்வை 39,889 மாணவ, மாணவியர் எழுதியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment