பள்ளிக் கல்வித்துறையுடன் தொடக்க கல்வித்துறையை இணைக்காமல் தற்போது உள்ளது போல தனித்து இயங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஆசிரியர்கள் அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனர். கடந்த 2000ம் ஆண்டில் கொண்டு வரப்பட்ட அனைவருக்கும் கல்வி இயக்கம்(SSA) 10 ஆண்டுகள் அனைத்து மாநிலங்களிலும் செயல் படுத்தப்பட்டு பின்னர் அந்த திட்டம் விலக்கிக் கொள்ளப்படும் என்று மத்திய அரசு அறிவித்தது. ஆனால் 2010ம் ஆண்டில் அந்த திட்டத்தின் நோக்கம் முழுமை பெறாத நிலையில் மேலும் அந்த திட்டத்தை மத்திய அரசு நீட்டித்தது. அத்துடன் மத்திய இடைநிலை கல்வி திட்டம்(RMSA) என்ற புதிய திட்டத்தையும் மத்திய அரசு அறிமுகம் செய்தது. இந்த திட்டம் தற்போது தமிழகத்தில் செயல்படுத்தப்பட்டு வருகின்ற நிலையில், மேற்கண்ட இரு திட்டங்களையும் ஒன்றாக இணைக்க வேண்டும் என்று மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இதன்படி தமிழகத்தில் இயங்கி வரும் இரண்டு திட்டங்களும் ஒன்றாக இணைக்கப்பட உள்ளன. இதற்கு முன்னதாக தமிழகத்தில் பொதுக் கல்வி வாரியம் கொண்டு வரப்பட்டது.
அதனால் ஏற்கெனவே இருந்து வந்த நான்கு கல்வி வாரியங்கள் கலைக்கப்பட்டன. இதன் காரணமாக மெட்ரிக்குலேஷன் பள்ளிகள் இயக்குநரகம் என்று தனியாக ஒன்று தேவையில்லை என்று கல்வியாளர்கள் கருத்து தெரிவித்து அதை மூட வேண்டும் என்று கேட்டு வருகின்றனர். இந்நிலையில், தொடக்கப் பள்ளிகளில் மாணவர்களின் சேர்க்கை குறைந்து வருவதாலும், ஆசிரியர் மாணவர்கள் விகிதாசாரப்படி பள்ளிகளை மாற்றி அமைக்கப்பட உள்ளதாலும் தொடக்க கல்வித்துறையை பள்ளிக் கல்வித்துறையுடன் இணைப்பதற்கான முயற்சிகளை தமிழக அரசு எடுத்துள்ளது. இணைப்பதால் ஏற்படும் சாதக பாதகங்கள்பற்றி கல்வி அதிகாரிகளை அழைத்து பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கடந்த வாரம் பேச்சு வார்த்தை நடத்தினார்.
இதையடுத்து, தொடக்க கல்வித்துறை தனியாக இயங்க வேண்டும் என்று ஆசிரியர்கள் கேட்டு வருகின்றனர். இது குறித்து தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் கூட்டணியின் சார்பில் அதன் பொதுச் செயலாளர் ரெங்கராஜன், முதல்வரிடம் கொடுத்த கோரிக்கை மனுவின் விவரம்: ஐந்தாண்டுத் திட்டத்தின் கீழ் பல புதிய கல்வித்திட்டங்களை செயல்படுத்த வசதியாக ஊராட்சி ஒன்றிய பள்ளிகளில் பணியாற்றும் 1.50 லட்சம் ஆசிரியர்களை அரசு அலுவலர்களாக மாற்றி கடந்த 1981ம் ஆண்டு அப்போதைய முதல்வர் எம்ஜிஆர் ஆணையிட்டார். அதன்படி பள்ளிக் கல்வித்துறையில் உள்ள பணிச்சுமையை கணக்கில் கொண்டும், தொடக்க ்கல்வி ஆசிரியர்களின் பிரச்னைகளுக்கு உடனடியாக தீர்வு காண்பதற்காகவும், நிர்வாக வசதிக்காகவும் தொடக்க கல்வி இயக்ககத்தை உருவாக்கினார். அதன்படி தொடக்க கல்வி இயக்ககம் தனியாக இயங்கி வருகிறது.
இந்நிலையில், தொடக்க கல்வித்துறையை பள்ளிக் கல்வித்துறையோடு இணைக்கப் போவதாக செய்திகள் வெளியாகியுள்ளது. தொடக்க கல்வித்துறையின் கீழ் ஊராட்சி ஒன்றியம், அரசு உதவி பெறும் பள்ளிகள் என பல ஆயிரம் பள்ளிகள் இயங்கி வருகின்றன. ஆசிரியர்களின் நலன்சார்ந்த பல்வேறு பிரச்னைகள் தீர்வு காண்பதில் இப்போதும் காலதாமதம் ஏற்படுகிறது. இந்நிலையில் பள்ளிக் கல்வித்துறையுடன் தொடக்க கல்வித்துறையை இணைத்தால் மேலும் கால தாமதம் ஏற்பட்டு பணிகள் ஸ்தம்பித்துப்போகும் நிலை ஏற்படும். எனவே தொடக்க கல்வித்துறை சீரான வளர்ச்சியுடன் தரமான கல்வி கிடைக்க செய்யவும், ஆசிரியர்கள் நலன் காக்கவும் தொடக்க கல்வித்துறை தனியாக செயல்பட உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு ரெங்கராஜன் அந்த மனுவில் தெரிவித்துள்ளார்
No comments:
Post a Comment