வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கான உதவித்தொகை பெற, சாந்தோமில் உள்ள வேலைவாய்ப்பு அலுவலகத்தில் விண்ணப்பிக்கலாம் என சென்னை மாவட்ட ஆட்சியர் வெ.அன்புச்செல்வன் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு:
தமிழக அரசால் வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கான உதவித் தொகை வேலைவாய்ப்பு அலுவலகங்களால் வழங்கப்படுகிறது.
10-ம் வகுப்பு, பிளஸ் 2 மற்றும் பட்டப்படிப்பு போன்ற கல்வித்தகுதிகளைப் பெற்று, வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து 5 ஆண்டுகளுக்கு மேல், வேலைவாய்ப்பின்றி காத்திருப்பவர்கள் உதவித்தொகை பெற, சாந்தோமில் உள்ள மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தை அணுக வேண்டும்.
10-ம் வகுப்பு தேர்ச்சி பெறாதவர்கள் உதவித்தொகை விண்ணப்பத்தைப் பெற, சாந்தோமில் உள்ள தொழில் திறனற்றோருக்கான மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தை அணுக வேண்டும்.
வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து ஓராண்டு உயிர்ப்பதிவேட்டில் உள்ள மாற்றுத்திறனாளிகள், கிண்டி மகளிர் தொழிற்பயிற்சி நிலையத்தில் உள்ள மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு வேலைவாய்ப்பு அலுவலகத்தில் விண்ணப்பிக்க வேண்டும்.
வருமான உச்சவரம்பு இல்லை
இவர்களுக்கு கல்வித்தகுதி, குடும்ப ஆண்டு வருமான உச்சவரம்பு இல்லை. தகுதியுடைய விண்ணப்பதாரர்கள் உரிய விண்ணப்ப படிவத்தை சம்பந்தப்பட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பெற்று விண்ணப்பிக்கலாம்.
ஏற்கெனவே உதவித்தொகை பெற்று வரும் பயனாளிகளில் விண்ணப்பம் சமர்ப்பித்து ஓராண்டு முடிந்தவர்கள், சுய உறுதிமொழி ஆவணத்தை, வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு எண், உதவித்தொகை எண் மற்றும் ஆதார் எண் ஆகிய விவரங்களுடன் நேரில் சமர்ப்பிக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment