அரசுப் பள்ளிகளில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் : விஜயகாந்த் கோரிக்கை
சென்னை:
“அரசுப் பள்ளிகளில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும்” என்று தமிழக அரசுக்கு விஜயகாந்த் கோரிக்கை விடுத்துள்ளார். தேமுதிக நிறுவன தலைவர் விஜயகாந்த் வெளியிட்ட அறிக்கை: தமிழகத்தில் 3.92 லட்சம் பட்டதாரி ஆசிரியர்களும், 2.17 லட்சம் இடைநிலை ஆசிரியர்களும் பணிக்காக வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிந்து காத்திருக்கின்றனர். ஆனால், தமிழகத்தில் உள்ள அரசு உயர்நிலை பள்ளிகளில் 2,223 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களும், அரசு மேல்நிலை பள்ளிகளில் 1,938 முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணி இடங்களும் நீண்டகாலமாக நியமிக்கப்படாமல் உள்ளது.
தமிழகத்தில் உயர்நிலை பள்ளிகளின் எண்ணிக்கை 6,081, மேல்நிலை பள்ளிகளின் எண்ணிக்கை 5,803, இதில் உயர்நிலை பள்ளிகளில் 884 தலைமை ஆசிரியர் பணியிடங்களும், மேல்நிலை பள்ளிகளில் 34 தலைமை ஆசிரியர் பணியிடங்களும் காலியாக உள்ளன. மாணவர்களின் கல்வித்தரம் உயர அனைத்து பாடங்களுக்கும், தனித்தனியாக ஆசிரியர்களை பாடம் வாரியாக உடனடியாக நியமிப்பது அவசியமானது. கற்றுத் தருவதற்கு ஆசிரியர்களே இல்லாத நிலையில், மாணவர்கள் எவ்வாறு தேர்வினை துணிவோடு எழுத முடியும்?. இதனால் மாணவர்கள் பெரும் இன்னல்களுக்கு ஆளாகின்றனர். இந்நிலையில் அரசு 100 சதவீதம் மாணவர்கள் தேர்வடைய வேண்டுமென தலைமை ஆசிரியர்களையும், ஆசிரியர்களையும் கட்டாயப்படுத்துவது நியாயம் தானா?.
2018-19ம் கல்வி ஆண்டில் 200 அரசு பள்ளிகளின் தரம் உயர்த்தப்படும் என்ற நிதிநிலை அறிக்கை அறிவிப்பின் மூலம், மேலும் புதிதாக 700 ஆசிரியர்கள் தேவையாக உள்ளது. எனவே மாணவர்கள் மேலும், மேலும் இடர்படாது பயில அந்தந்த பாடங்களுக்கு உரிய ஆசிரியர்களை உடனடியாக நியமித்து, அனைத்து ஆசிரியர் மற்றும் தலைமை ஆசிரியர் பணியிடங்களை நியமித்து, தமிழகத்தில் கல்வித்தரம் உயர தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்கவேண்டும். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
40000 கணினி ஆசிரியர்கள் சார்பிலும் மற்ற பாட ஆசிரியர்கள் சார்பிலும்
மனமார்ந்த நன்றிகள் ஐயா அவர்களுக்கு,
வெ.குமரேசன்,
மாநிலப் பொதுச் செயலாளர் ,
9626545446 ,
தமிழ்நாடு பி.எட் கணினி அறிவியல் வேலையில்லா பட்டதாரி ஆசிரியர்கள் சங்கம் பதிவு எண்:655/2014
No comments:
Post a Comment