அம்பத்தூர்: கொரட்டூர், சாவடி தெருவில் உள்ள மாநகராட்சி பள்ளியில் வகுப்பறைகள், ஆய்வக வசதிகள், கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லாததால் மாணவர்கள் கடும் அவதிப்பட்டு வருகின்றனர். அம்பத்தூர் மண்டலத்திற்கு உட்பட 84வது வார்டான கொரட்டூர், சாவடி தெருவில் மாநகராட்சி மேல்நிலை பள்ளி உள்ளது. மேற்கண்ட பள்ளிகளில் 450க்கும் மேற்பட்ட மாணவ- மாணவிகள் பயின்று வருகின்றனர். இந்த பள்ளிகளில் தலைமை ஆசிரியர்கள் உள்பட 28 ஆசிரியர்கள் பணியாற்றி வருகின்றனர். மேலும், இதே வளாகத்தில் 25 குழந்தைகள் படிக்கும் அங்கன்வாடி மையமும் அமைந்துள்ளது.'கணினி கல்வியின் புதுமை' மேற்கண்ட பள்ளிகள் பல ஆண்டாக செயல்பட்டு வருகின்றன. இந்த பள்ளிகளில் அடிப்படை வசதிகள் சரி வர இல்லாததால் மாணவர்கள் தினமும் அவதிப்பட்டு தான் படிப்பை மேற்கொண்டு வருகின்றனர்.
இது குறித்து பொதுமக்கள் கூறுகையில், ‘‘கொரட்டூரில் உள்ள மேல்நிலைப்பள்ளியில் மாணவர்களுக்கு போதுமான வகுப்பறைகள் இல்லை. இதனால் இட நெருக்கடியில் தான் கல்வி கற்க வேண்டியது உள்ளது. தனித்தனியாக ஆய்வக வசதி கிடையாது. இதனால் முறையான பயிற்சி பெற முடியாமல் மாணவர்கள் சிரமப்பட்டு வருகின்றனர். கம்ப்யூட்டர் பாட பிரிவு ஆய்வக வசதி இருந்தும் ஆசிரியர் இல்லாததால் மாணவர்கள் கணினியை முறையாக கையாளுவது இல்லை. இதனால், கம்ப்யூட்டர் பாட பிரிவை மாணவர்கள் சரி வர பயில முடிவதில்லை.
வகுப்பறைகளுக்கு போதுமான மேஜை, நாற்காலிகள் இல்லை. பள்ளி வளாகத்தில் உள்ள தொட்டிகளில் வாரத்திற்கு இரு முறை தான் மாநகராட்சி நிர்வாகம் குடிநீர் நிரப்பி வருகிறது. இதனால் போதுமான குடிநீர் இன்றி மாணவர்கள் தாகத்தால் நாக்கு வறண்டு போய் விடுகின்றனர். போதுமான கழிப்பறை வசதியின்றி மாணவ - மாணவர்கள் இயற்கை உபாதைகளை கழிக்க அவதிப்பட்டு வருகின்றனர். இந்த கழிப்பறைகள் சுகாதாரம் இன்றி இருப்பதால் மாணவர்கள் தொற்று நோய்க்கும் ஆளாகி வருகின்றனர்.
ஒன்று முதல் 12ம் வகுப்பு வரை மாணவ - மாணவர்கள் விளையாட போதுமான விளையாட்டு திடல் வசதியின்றி இட நெருக்கடியால் அவதிப்பட்டு வருகின்றனர். மேலும், பள்ளிக்கு காவலாளி இல்லாததால் நள்ளிரவில் சமூக விரோதிகளின் கூடராமாக மாறி வருகிறது. இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் பல முறை மாவட்ட நிர்வாகத்திற்கும், கல்வி துறை உயர் அதிகாரிகளுக்கும் புகார்கள் அனுப்பி உள்ளனர். இருந்த போதிலும் அதிகாரிகள் எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் அலட்சியமாகவே உள்ளனர். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கொரட்டூர், சாவடி தெருவில் உள்ள மாநகராட்சி மேல்நிலைப்பள்ளி அடிப்படை வசதிகளை செய்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
துப்புரவு பணி செய்யும் மாணவ, மாணவிகள்
கொரட்டூர் மாநகராட்சி மேல்நிலைப்பள்ளியில் பணியாற்றி வந்த துப்புரவு ஊழியரை பள்ளி கல்வி துறை இயக்குனர் அலுவலகத்திற்கு பணிமாற்றப்பட்டு உள்ளார். இதனால் பள்ளியில் துப்புரவு பணிகளை செய்ய ஊழியர் இல்லாததால், குப்பைகள் ஆங்காங்கே குவிந்து கிடக்கின்றன. சில நேரங்களில் மாணவர்கள் தான் துப்புரவு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர் என்று பெற்றோர்கள் குற்றம்சாட்டுகின்றனர்..
No comments:
Post a Comment