'நாஸ்' தேர்வால் வெளிச்சத்துக்கு வந்தது..
தேசிய கற்றல் அடைவுத்தேர்வு முடிவுகள் அடிப்படையில், கோவை மாவட்டத்தில், 5, 8ம் வகுப்பு மாணவர்கள், கல்வியில் மிகவும் பின்தங்கியிருப்பது தெரியவந்துள்ளது.மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம், கடந்த நவ., 13ம் தேதி, நாடு முழுவதும், தேசிய கற்றல் அடைவுத்தேர்வை (நாஸ்) நடத்தியது. தமிழகத்தில், இத்தேர்வு மூன்று, ஐந்து, எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் நடந்தது. இதன் முடிவுகள், (www.mhrd.gov.in) இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
கோவை மாவட்டத்தில், இத்தேர்வு 104 பள்ளிகளில் நடந்தது. எட்டாம் வகுப்புக்கான தேர்வை, 30 பள்ளிகளை சேர்ந்த, 629 பேர் மட்டுமே எழுதினர். ரேண்டம் முறையில், 389 அரசுப்பள்ளி மாணவர்களும், இத்தேர்வில் பங்கேற்றனர்.தமிழ், கணிதம், அறிவியல், சமூக அறிவியல் பாடங்களுக்கு, அப்ஜெக்டிவ் முறையில், தலா 50 மதிப்பெண்களுக்கு தேர்வு நடந்தது. இதன் முடிவுகள், கல்வியாளர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
குறிப்பாக, கணிதப்பாடத்தில், 75 சதவீதத்துக்கும் மேற்பட்ட கேள்விகளுக்கு, 10 மாணவர்கள் மட்டுமே சரியாக பதில் அளித்துள்ளனர். பெரிய எண்களை பெருக்குதல், கூட்டல், கழித்தல் போன்ற கணக்குகளுக்கு கூட, மாணவர்கள் திணறுவதாக, ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.அறிவியல், சமூக அறிவியல் பாடத்தில், 75 சதவீதத்துக்கும் மேற்பட்ட கேள்விகளுக்கு, ஏழு மாணவர்கள் மட்டுமே சரியாக பதில் அளித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
பேரிடர் மேலாண்மை, நகரமயமாதல் குறித்த கேள்விகளுக்கு, பல மாணவர்கள் விடையளிக்கவில்லை. தினசரி வாழ்வில் கணிதம், அறிவியல், சமூக அறிவியலின் பயன்பாடு குறித்து, பல மாணவர்களுக்கு தெரியவில்லை என்பதே, இன்றைய கல்விமுறையின் சாபக்கேடாக உள்ளதாக, கல்வியாளர்கள் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.
இதேபோல், ஐந்தாம் வகுப்பில், 34 பள்ளிகளில் இருந்து, 596 மாணவர்கள், நாஸ் தேர்வு எழுதினர். கணிதம், சுற்றுச்சூழல் அறிவியல் பாடத்தில், மாணவர்கள் பின்தங்கியிருப்பதாக, தேர்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.
கட்டுரை வாசித்தல், தமிழ் எழுத்துகளின் ஒலி வேறுபாடு, நீளம், அகலம் அளத்தல் ஆகிய கேள்விகளுக்கு, 30 சதவீத மாணவர்களால், பதில் அளிக்க இயலவில்லை. தொடக்க, நடுநிலை வகுப்புகளில், பாடத்தின் அடிப்படை புரிதலே இன்றி, மனப்பாட முறையில், மாணவர்களை தயார்படுத்துவது, இத்தேர்வு முடிவுகள் வெளிச்சம் போட்டு காட்டுகின்றன.
பயிற்சியை மாற்றுவோம்!
கல்வித்துறை அதிகாரிகள் கூறுகையில்,'தேசிய கற்றல் அடைவுத்தேர்வு, அனைத்து பள்ளிகளுக்கும் நடக்கவில்லை. ரேண்டம் முறையில் பள்ளிகள் தேர்வு செய்யப்பட்டதால், இம்முடிவுகளை ஒட்டுமொத்த மாவட்டத்தின், கல்விகுறியீடாக எடுத்து கொள்ள முடியாது. ஆனால், இம்முடிவுகளை புறக்கணிக்கவும் முடியாது. அடுத்த கல்வியாண்டில், ஆசிரியர்களுக்கு மாறுபட்ட முறையிலான கற்பித்தல் பயிற்சிகள் அளிக்கப்படும்' என்றனர். -நமது நிருபர்
No comments:
Post a Comment