லஞ்சம் பெற்றுக் கொண்டு நிரப்பப்படும் ஆசிரியர் பணியிடங்கள்; வட மாவட்ட மக்களுக்கு தமிழக அரசு துரோகம் - அன்புமணி கண்டனம்
“தமிழ்நாட்டில் நடப்பாண்டில் புதிய ஆசிரியர்கள் நியமிக்கப்பட மாட்டார்கள் என்று பள்ளிக்கல்வித் துறை அறிவித்துள்ளது. 2018-19 ஆம் ஆண்டிற்கான தமிழக அரசின் நிதிநிலை அறிக்கையிலும் புதிய ஆசிரியர்கள் குறித்த அறிவிப்புகள் இடம்பெறவில்லை. தமிழக அரசின் மேல்நிலைப் பள்ளிகளில் 1,640 ஆசிரியர் பணியிடங்கள், உயர்நிலைப் பள்ளிகளில் 2,405 பணியிடங்கள் உட்பட 4,963 பணியிடங்கள் காலியாக உள்ள நிலையில் புதிய ஆசிரியர்களை நியமிக்க மறுப்பது கண்டிக்கத்தக்கது.
தமிழகத்தில் கல்வித் தரத்திலும், பொதுத்தேர்வுகளின் தேர்ச்சி விகிதத்திலும் வட மாவட்டங்கள் மற்றும் காவிரி பாசன மாவட்டங்கள் மிகவும் பின்தங்கிய நிலையில் உள்ளன. இந்த மாவட்டங்களில் உள்ள அரசு பள்ளிகளில் போதிய கட்டமைப்புகள் இல்லாததாலும், ஆசிரியர் பணியிடங்கள் காலியாக இருப்பதும்தான் இந்த நிலைக்கு காரணம் என்று பாமக கடந்த பல ஆண்டுகளாக ஆதாரங்களுடன் குற்றம்சாட்டி வருகிறது.
தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின்படியும், தகுதித் தேர்வில் வெற்றி பெற்ற பட்டதாரி ஆசிரியர்களின் கோரிக்கை மனுவுக்கு அளித்த பதிலிலும் பள்ளிக்கல்வித் துறை தெரிவித்துள்ள புள்ளிவிவரங்கள் மூலம் இக்குற்றச்சாட்டுகள் உண்மை என்பது உறுதியாகியுள்ளது.
தமிழக அரசு பள்ளிகளில் 349 தமிழ் ஆசிரியர்கள், 273 ஆங்கில ஆசிரியர்கள், 490 கணித ஆசிரியர்கள், 773 அறிவியல் ஆசிரியர்கள், 520 சமூக அறிவியல் ஆசிரியர்கள் என மொத்தம் 2,405 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் காலியாக இருப்பதாக பள்ளிக்கல்வித் துறை அளித்துள்ள புள்ளிவிவரங்கள் கூறுகின்றன. இது 05.03.2018 அன்றுள்ள நிலவரமாகும். 01.12.2017 அன்று நிலவரப்படி காலியிடங்கள் எண்ணிக்கை 2,084 ஆகும்.
இதில் மாவட்ட வாரியான காலியிடங்களைப் பார்த்தால் 78% காலியிடங்கள் வட மாவட்டங்களில்தான் உள்ளன. அதிலும் குறிப்பாக விழுப்புரம் மாவட்டத்தில் 383 காலியிடங்கள், திருவண்ணாமலை மாவட்டத்தில் 381, வேலூர் மாவட்டத்தில் 335, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 271 என 4 மாவட்டங்களில் மட்டும் 1,370 காலியிடங்கள் உள்ளன. இது மொத்த காலியிடங்களில் மூன்றில் இரண்டு பங்காகும். மாநிலத்தின் மொத்த காலியிடங்களில் 66% காலியிடங்களை 4 மாவட்டங்களில் மட்டும் வைத்திருப்பது அந்த மாவட்டங்களுக்கு இழைக்கப்படும் துரோகம் என்பதைத் தவிர வேறில்லை.
இந்த நிலை 25 ஆண்டுகளுக்கும் மேலாக நீடிக்கிறது. இந்த காலங்களில் பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரெண்டாம் வகுப்புப் பொதுத் தேர்வுகளின் தேர்ச்சி விகிதங்களில் இந்த மாவட்டங்கள்தான் கடைசி 5 இடங்களில் மாறி மாறி வருகின்றன என்பதை எவரும் மறுக்க முடியாது. ஆக, இந்த மாவட்டங்களைச் சேர்ந்த மாணவர்கள் பொதுத்தேர்வுகளில் போதிய அளவில் தேர்ச்சி பெற முடியாததற்கு அவர்கள் காரணமல்ல, அவர்களுக்கு பாடம் கற்பிக்க போதிய எண்ணிக்கையில் ஆசிரியர்களை நியமிக்காத அரசு தான் காரணம்.
அதுமட்டுமின்றி, இது இயல்பாக நடந்த ஒன்றல்ல. ஆட்சியாளர்களின் ஊழல்வெறிதான் இதற்குக் காரணமாகும். வழக்கமாக ஆசிரியர்கள் நியமிக்கப்படும்போது எந்தெந்த பள்ளிகளில் அதிகளவில் காலியிடங்கள் உள்ளனவோ, அங்கு தான் அவர்களை நியமிக்க வேண்டும். அந்த நேரங்களில் இந்த மாவட்டங்களில் ஆசிரியர்கள் போதிய அளவில் நியமிக்கப்படுவதில்லை.
மாறாக இந்த மாவட்டங்களில் ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டதாக கணக்குக் காட்டப்பட்டு, அவ்வாறு கணக்குக் காட்டப்பட்ட ஆசிரியர்கள் மற்றும் ஏற்கனவே இந்த மாவட்டங்களில் பணியாற்றிக் கொண்டிருந்த ஆசிரியர்களிடம் கையூட்டு வாங்கிக்கொண்டு, நிர்வாக இடமாற்றம் என்ற பெயரில் அவர்களை நகர்ப்புறங்களுக்கும், அவர்களின் சொந்த மாவட்டங்களுக்கும் அனுப்பி வைப்பதை ஆட்சியாளர்கள் வழக்கமாக வைத்திருக்கின்றனர்.
இதனால் சில மாவட்டங்களில் தேவைக்கும் அதிகமாக ஆசிரியர்கள் உள்ளனர். உதாரணமாக சென்னை, திண்டுக்கல், தேனி, நாமக்கல், திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் காலியிடங்களே இல்லை என்பதுடன், அங்கு அனுமதிக்கப்பட்ட எண்ணிக்கையை விட கூடுதலாகவும் ஆசிரியர்கள் உள்ளனர். மதுரை, தூத்துக்குடி (தலா 2), கோவை, கரூர், திருச்சி (தலா 3), சிவகங்கை (4), (8) ஆகிய மாவட்டங்களில் ஒற்றை இலக்கத்தில் தான் காலியிடங்கள் உள்ளன.
ஆசிரியர்களை நியமிப்பதில் மாவட்டங்களுக்கிடையே பாகுபாடு காட்டுவது எந்த வகையில் நியாயம்? பின்தங்கிய மாவட்டங்களின் மாணவர்கள் முன்னேற வேண்டாமா? பின்தங்கியே கிடக்க வேண்டுமா?
இந்த நிலையை மாற்ற தமிழக அரசு தயாராகக் கூட இல்லை என்பதுதான் கொடுமை. இப்போது கூட பிற மாவட்டங்களில் உள்ள உபரி ஆசிரியர்கள் பணி நிரவல் முறையில் காலியாக உள்ள இடங்களுக்கு அனுப்பப்படுவார்கள் என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சரும், முதன்மைச் செயலரும் கூறியுள்ளனர். கடந்த காலங்களில் இத்தகைய வாக்குறுதிகள் பலமுறை அளிக்கப்பட்ட போதிலும், ஒருமுறை கூட அவை செயல்படுத்தப்பட்டதில்லை.
இப்போதும் நிறைவேற்றப்படும் என்ற நம்பிக்கை இல்லை. காரணம் நிர்வாக இடமாற்றம் செய்ய ஆட்சியாளர்கள் தலா ரூ.5 லட்சம் வரை கையூட்டு வாங்கியிருப்பதால் அவர்களை தொந்தரவு செய்ய மாட்டார்கள். இதே நிலையே தொடர்ந்து நீடிக்கும். வரும் மே மாதத்துடன் ஆயிரக்கணக்கான ஆசிரியர்கள் ஓய்வு பெறுவதால் நிலைமை மோசமாகும்.
தமிழ்நாட்டில் கடந்த 2013, 2017-ஆம் ஆண்டுகளில் நடத்தப்பட்ட தகுதித் தேர்வுகளில் வெற்றி பெற்ற 30 ஆயிரத்திற்கும் கூடுதலான ஆசிரியர்களுக்கு இன்னும் பணி வழங்கப்படவில்லை. அவர்களுக்கும் வேலை வழங்க வேண்டிய கடமை அரசுக்கு உள்ளது.
எனவே, இப்போது காலியாக உள்ள பணியிடங்கள், விரைவில் காலியாகும் பணியிடங்கள் ஆகியவற்றைக் கணக்கிட்டு உடனடியாக நிரப்ப வேண்டும். கிராமப்புற பகுதிகள், தொலைதூரப் பகுதிகள் ஆகியவற்றில் பணியாற்ற ஆசிரியர்களை ஊக்கப்படுத்தும் வகையில் அவர்களுக்கு சிறப்புப் படி, பதவி உயர்வில் முன்னுரிமை ஆகியவற்றையும் வழங்க வேண்டும்”
இவ்வாறு அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
-செய்தி :இந்து தமிழ் நாளிதழ்.
-செய்தி :இந்து தமிழ் நாளிதழ்.
No comments:
Post a Comment